ஊறுகாய் பாட்டில்




















ஊறுகாய் பாட்டிலின்
அடிப்புறத்தில் எப்போதும்
தன் கையொப்பமிட்ட கடிதத்தை
வைத்து அனுப்பிவிடுகிறது வீடு

மூடித்திறக்கும் ஒவ்வொருமுறையும்  
வெளிக்கிளம்பி அறையெங்கும்
தன் நினைவை ருசியை
ஊறச்செய்தபடி இருக்கும்  

அரைக்கரண்டி ஊறுகாய்க்கு ஒருமுறை என
முந்நூறு மணி அடித்ததும்
தரைதட்டுகிறது கரண்டி
தானே திறந்துகொள்கிறது கடிதம்

பின்பு யாருடைய உத்தரவுக்கும் காத்திருக்காமல்
ஒருங்கமைகிறது அறை
சலவையாகின்றன சட்டைகள்
எங்கிருந்தோ வந்துசேர்கிறது பணம்
சேகரமாகின்றன மிட்டாய்கள்

சிக்கனவிலை பயணச்சீட்டுகள் அச்சாகி
மேசைமேல் கிடக்கின்றன
காவிரியில் குளிக்கப்போய்விடுகிறது மனது

வீடுதிரும்புகிறது மீண்டும்
கழுவி துடைக்கப்பட்ட
ஊறுகாய் பாட்டில்.

------

நன்றி : திண்ணை

No comments: