வரலாறு

















காலவெளியில்
நுனிப்புல் மேய்ந்தபடி நகரும்
ஒரு கருப்பு நிற பசு

எருமை அல்ல பசுதான்
நுனிப்புல் மேய்கிறதே

மாறும் பருவங்களும்
மடிவற்றும் காலங்களும்கூட
பொருட்டல்ல
நுனிப்புல்தான் எப்போதும்

இரத்தமும் கண்ணீரும்
உப்பும் உவர்ப்புமாய் விழுந்து
படர்ந்து பூத்தபடியிருக்கும் வெளியில்

புதுப்பூவின் தேனை
தெரியாமல் நக்கிவிட்டாலும்
பிட்டத்தில் நாக்கை ஓட்டி
தேயத்தேயத் தீட்டிவிட்டு
மீண்டும் புல் தேடி அலையும் பசு
உலர்ந்து மடிந்த பூக்களையோ
உண்டுவுண்டு மயங்கும்

அசை போடுகையில் மட்டும்
கழுத்துமணி கேட்கும் பசுவுக்கு
இறக்கம் பொங்கி
நுரை தள்ளும்.

என்ன செய்ய முடியும்
அதன் மூக்குக்கயிறு
முன்னால் மட்டுமே இழுபடக்கூடியதல்லவா?

பாவம் என்னதான் செய்யும் பசு
கன்றுக்கு சுரக்கத்தானே
காலங்காலமாய் மேய்கிறது

நீர்த்த பால் மட்டுமே செரிக்கும்
வெள்ளைத் தலைக்
கலப்பினக் கன்று அது

மண்ணின் வாசம் வரும் எதுவும்
மட்கியதே என்று குமட்டும்
நோஞ்சான் கன்றுக்கு
நுனிப்புல்லில் ஊறிய
பாலூட்டி வளர்க்கும் பசு

இரத்த வாடை அடித்துவிட்டால்
தன்னையே வெறுக்கும் என்றஞ்சி
கன்றுகளுக்கு இப்போதெல்லாம்
சீம்பாலும் கூட கொடுப்பதில்லை.


நன்றி : பதாகை  02 மார்ச்  2015.

No comments: